வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

தொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார்.

தொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழித்தேரி எள்ளுவிளையிலுள்ள கி.பி. 1639ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பாடு தேவபிச்சை நாடார் தோட்டத்திலுள்ள கி.பி. 1645ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றில் ‘ஆதிச்ச நாடாவான்' என்ற பட்டப் பெயர் கொண்டோர் இடம்பெறுகின்றனர். குறிப்பாக, மடத்து அச்சம்பாடு கல்வெட்டின்மூலம் அச்சன்பாடு என்ற அவ்வூரைத் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலுக்கு மானியமாகக் கொடுத்தோருள் ஆதிச்ச நாடாவார்களும் அடங்குவர் எனத் தெரியவருகிறது. எனவே அவர்களுடைய பெயர்த் தொடர்பு இவ்வூருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. 

முதலில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என்ற பெயர் பற்றி நான் ஆய்ந்து அறிந்த செய்தியைக் கூறிவிடுகிறேன். இப்பறம்பு 114 ஏக்கர் பரப்புள்ள, சீனிக் கல் பாறைகள் (Quartzite) நிரம்பிய மேட்டுநிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. இப்பறம்பில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாகப் புதைக்கப்பட்டிருப்பதால் தாழிக்காடு என்றும் கூறப்படுவதுண்டு. இங்கு தாழிகளில் அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் வாழ்விடமாக இருந்த பேரூர் எது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. 

ஆதிச்சநல்லூர் மிகச் சிறிய ஊர். நெல்லை - திருச்செந்தூர் ரயில்ப் பாதையில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே மிகப் பிரபலமாகிவிட்டதால் இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கலாம். (இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டபோது நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்வு இப்போது வேடிக்கையான செயல்பாடாக எஞ்சித் தொடர்கிறது. அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.) ஆனால் ஆதிச்சநல்லூர் என்பது வெள்ளூர் கஸ்பா என்ற வருவாய்க் கிராமத்தின் பிடாகையாகக் கருதப்பட்டு வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்றே அடங்கல் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. 

வெள்ளூர் என்றஊர்கி.பி.9ஆம்நூற்றாண்டுக்குரிய சுசீந்திரம் கல்வெட்டிகுறிப்பிடப்பட்டுள்ளது1. எனவே அவ்வூர் மிகப் பழமையான ஊரென்பது தெரியவருகிறது. 18-19ஆம் நூற்றாண்டுகளில் 'வெள்ளூர்க் கவிராயர் குடும்பம்' என்று பெயர் பெற்ற ஒரு புலவர் குடும்பத்தவரும் அக்குடும்ப வாரிசுகளும் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர். மேலும், வெள்ளூரிலுள்ள பெருமாள் கோயில் திடலில்2000 ஆண்டுகளுக்கு சிவப்புபபானையோடுகளஎன்னால்சேகரிக்கப்பட்டன2. எனவே, ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் அடக்கமாகியிருக்கிற மனிதர்கள், வெள்ளூரில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம். 

1906ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்ட அலெக்சாண்டர் ரீ, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி என்ற ஊரே, இத்தாழிக்காட்டு முன்னாள் மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போது ஆதிச்சநல்லூர்ப் பறம்புக்கும் கொங்கராயக் குறிச்சிகுமிடையே மேற்கு - கிழக்காக ஓடுகிற தாமிரபரணி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதிருப்பதைவிட வடக்கில் 2 கி.மீ. தொலைவில் கொங்கராயக் குறிச்சிக்கு வடக்கே ஓடியிருக்கலாம் என்று அலெக்சாண்டர் ரீ கருதியுள்ளார். இவ்வாறு ஆற்றின் போக்கு மாறியது - மாற்றப்பட்டது - பற்றி இப்பகுதியில் ஒரு கதை வழங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் திருவைகுண்டம் ஊரும், கைலாசநாதர், கள்ளப்பிரான் கோவில்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவந்தன என்றும், செழுவனூர் வேளாளர் பொன்னப் பிள்ளை என்பவரின் முன்முயற்சியால் ஆற்றின் போக்கு மாற்றப்பட்டது என்றும், அவருடைய உதவிக்குக் கைமாறாக திருவைகுண்டத்தில் கோட்டையொன்று உருவாக்கப்பட்டு அக்கோட்டைப் பகுதியில் அவரது வர்க்கத்தார் குடியேற்றப்பட்டுக் 'கோட்டைப் பிள்ளைமார்' என அழைக்கப்படலாயினர் என்றும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் ஆதிச்சநல்லூர்க்கு அருகில் பொன்னன் குறிச்சி என்ற ஊர் உருவாக்கப்பட்டதென்றும் அக்கதையில் கூறப்படுகின்றன. அக்கதையில் இடம்பெறும் பொன்னப் பிள்ளையைப் பற்றித் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1441ஆம் ஆண்டுக்குரிய வீரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும், “செழுவனூர்ப் பிறவிக்கு நல்லான் பொன்னப் பிள்ளை” என்பது அவருடைய முழுமையான பெயரென்றும் முனைவர் கமலா கணேஷ், திருவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.3 

கொங்கராயக் குறிச்சி, பழமையான ஊரே. அவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கட்டுமானம் ஒன்றினைத் தாம் கண்டதாக ரீ குறிப்பிட்டுள்ளார். அவ்வூரில் உள்ள விநாயகர் கோயில் வாயில் நிலையில் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு என்னால் கண்டறியப்பட்டன.4 அக்கல்வெட்டுகளின் மூலம், கொங்கராயக் குறிச்சியின் பழம்பெயர் ‘முதுகோனூர்' என்பதும், அக்கல்வெட்டுகள் ‘முன்றுறை வீரர் ஜினாலயம்' என்ற சமணப் பள்ளிக்குரியவை என்றும் தெரியவருகின்றன. சமண சமயம் பின்பற்றுவாரின்றி மறைந்துபோன பின்னர், இக்கல்வெட்டுகள் மட்டும் விநாயகர் கோயிலின் நிலைக்காலில் பொருத்தப்பட்டுவிட்டன எனத் தெரிகிறது. முன்றுறை வீரர் ஜினாலயத்தின் இறைவன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. சற்றொப்ப 40 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததாகவும், இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஒருமுறை இப்பகுதிக்கு வருகைதந்தபோது இப்பறம்பையும் இங்கிருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பார்வையிட்டுள்ளாரென்றும் இப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. அச்சிற்பமே கொங்கராயக் குறிச்சியிலிருந்த ஜைனப் பள்ளியின் தீர்த்தங்கரர் சிற்பம் போலும். அச்சிற்பம் இப்போது எங்கு உள்ளதெனத் தெரியவில்லை. 

ஆங்கிலேய அரசு, மதராஸ் அரசாணை 867 - நாள்: 13.08. 1876 மூலம் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு பற்றிய ஒரு குறிப்பினைப் பதிவு செய்தது. அந்த ஆணையில் அரசு செயற்பொறியாளர் ஜே.டி. கிரான்ற் என்பவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி, தூத்துக்குடிக்கு மேற்கே புதுக்கோட்டை என்ற ஊரையடுத்து அமைந்துள்ள நல்லமலை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதையுண்ட நிலையில் காணப்படுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்ற மானிடவியலாளர் ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் அகழாய்வு செய்து, ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களை பெர்லின் நகருக்கு எடுத்துச் சென்றார். (அவை Volkar Kunde அருங்காட்சியத்தில் உள்ளன.) இதனையடுத்து 1903-1904ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொல்லியலாளர் லூயி லாப்பெக்யூ அகழாய்வு மேற்கொண்டு, கிடைத்த அரும்பொருள்களை பாரிஸ் நகர அருங்காட்சியகத்திற்குக் கொண்டுசென்றார். இதே காலகட்டத்தில் அலெக்சாண்டர் ரீ அகழாய்வு மேற்கொண்டு, 1906ஆம் ஆண்டில் அகழாய்வு அறிக்கை வெளியிட்டார். இந்த அகழாய்வின்போது கிடைத்த அரும்பொருள்களுள் பெரும்பாலானவை சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டன. பொன்னாலான கழுத்தணி போன்ற ஓரிரு அரும்பொருள்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் மனைவியால் எடுத்துச் செல்லப்பட்டன. பழங்கலைப் பொருள்கள் பதிவுச் சட்டமோ, அகழாய்வு குறித்த திட்டவட்டமான வரையறைகளோ இல்லாமலிருந்த நிலை இத்தகைய நிகழ்வுகளுக்குத் துணைக் காரணங்களெனில், இந்நாடே தமது உடைமை எனக் கருதிய ஆங்கிலேயர்களின் ஆதிக்க மனப்பான்மையே முதன்மையான காரணம். 

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரும்பொருள்கள் பற்றிய ரீ அவர்களின் அறிக்கை, வரலாற்று ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திற்று. குறிப்பாக இங்கிருந்து கிடைத்த மனித மண்டையோடுகள், உடற்கூறு அடிப்படையிலான மானிடவியல் ஆய்வு மேற்கொள்வோருக்குச் சுவையான ஊகங்களைத் தூண்டுகிற பொருள்களாயின. அரும்பொருள்களுள் மட்கலன்களின் வகைப்பாடுகள், பிற பழமையான பண்பாட்டு அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட மட்கலன்களின் வகைகளுடன் ஒப்பிடப்பட்டுக் குடிப்பெயர்வுகள் பற்றிய ஊகங்களுக்கு வித்திட்டன. ஆனால் தமிழறிஞர்கள் இத்தகைய ஆய்வுகளையோ ஊகங்களையோ அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. சாத்தான்குளம் இராகவன் போன்ற இதழாளர்கள் ஆதிச்சநல்லூர் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதி இவ்வூரைப் பிரபலப்படுத்தினர் என்ற அளவில்தான் தமிழறிஞர்கள், தமிழக வரலாற்றறிஞர்களின் முயற்சி நின்று போயிற்று. 

2003-2004ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் தியாக. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை அகழாய்வில் கிடைத்த அரும்பொருள்களை உலோகவியல், மானிடவியல் முதலிய துறை சார்ந்த வல்லுநர்களின் சோதனைக்கு ஆட்படுத்திச் சில முடிபுகளை அறிவித்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு: 1) உலோகங்களின் அறிமுகம், குறிப்பாக இரும்பின் அறிமுகம் கி.மு. 1000 ஆவது ஆண்டுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. கி.மு. 1500 அளவில் இருக்கலாம். 2) மண்டையோட்டு ஆய்வின் அடிப்படையில் கூறுவதானால், இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மனிதர்கள் முன்னிலை நிக்ராய்டு, முன்னிலை ஆஸ்திரலாய்டு, மங்கோலாய்டு, இந்தோ ஐரோப்பிய (காகசாய்டு) இனங்களின் கலப்புக் கூறுகள் உடையோர். திராவிட இனம் என நம்பப்படும் மத்தியதரைக் கடற்பகுதி இனக்கூறுகள் மிகக் குறைவான அளவிலேயே (ஐந்து விழுக்காடு) உள்ளன. 

மண்டையோடுகளை ஆராய்ந்து மேற்குறித்த முடிவினை வெளியிட்டவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. பத்மநாதன் இராகவன். உலோகங்களின் பயன்பாட்டுக்கான கால வரையறையை நிர்ணயித்தலில் தியாக. சத்தியமூர்த்தி அவர்களுக்கு, கடல் சார் தொழில்நுட்பவியலுக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute of Ocean Technology) சென்னைக் கிளையைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சசிசேகரன் உதவி புரிந்துள்ளார். 

தற்சமயம், இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத் துறை - தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் திருமதி. சத்தியபாமா பத்ரிநாத் தலைமையிலான குழுவினரால் அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது. 

ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வின் வரலாற்றைப் படிக்கும்போதே ஓர் உண்மை விளங்கியிருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றின் முதன்மையான ஆவணங்களாகக் கருதத்தக்க சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும், பாண்டிய நாட்டின் மிகப் பழமையான வரலாற்று நிகழ்வுகளைப் புராண வடிவில் கூறுகிற திருவிளையாடற் புராணம் போன்ற இடைக்கால இலக்கியங்களையும் ஆதிச்சநல்லூர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட விடயங்களுடன் தொடர்புபடுத்தி ஆழமாக ஆராயப்படவில்லை. சங்க இலக்கியங்களிலும் மணிமேகலையிலும் தாழிகளைப் பற்றி வருகிற குறிப்புகளைப் பட்டியலிடுவது மட்டுமே நடைபெற்றுள்ளது. 

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். 

ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது. 

‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8 

விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். 

அரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் என்ற வரலாற்று உண்மையைப் பாண்டிய மன்னர்களின் முத்துபடு துறைமுகமாக இருந்த கொற்கை மூதூரின் வரலாற்றுடன் இணைத்து ஆராய்ந்தால்தான் தமிழக வரலாற்றின் தொடக்கப்பகுதி துலக்கமுறும். அத்தகைய ஆய்வில் தொல்லியல் அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து ஈடுபடவேண்டும் என்பதே நமது விண்ணப்பம். 

(ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் பற்றிய ஒரு வேடிக்கையான செய்தி: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு ரயில் பாதை போடப்பட்டபோது, ஆழ்வார் திருநகரியிலிருந்த சடகோபாச்சாரியார் வைணவ மடத்துக்குரிய துண்டு நிலமொன்றின் ஊடாக ரயில் பாதை போடநேர்ந்தது. அம்மடத்தின் அதிபர், நிலத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு, அந்நிலத்துக்கு வருட வாடகையாக நான்கணா கொடுப்பதாகத் தீர்மானித்தது. வைணவ மடாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார். நான்கணா ஆண்டு வாடகை, நானறிந்தவரை 2000ஆம் ஆண்டு வரை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் தென்னக ரயில்வே சார்பில் 25 பைசா கொடுக்கப்பட்டு வருகிறதா எனத் தெரியவில்லை.) 

அடிக்குறிப்புகள்: 

1. “திருவழுதி வளநாட்டுத் திருவெள்ளூரில் சேனாவரையன் தத்தன் அந்தரி” - கோ மாறஞ்சடையனின் சுசீந்திரம் கல்வெட்டு (Travancore Archaeological Series Vol. III, no. 27.) 
2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக நான் பணிபுரிந்தபோது 6. 10. 1995 அன்று கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தது. 
3. South Indian Inscriptions, Vol. V, no.736, quoted in “Boundary walls: Caste and women in a Tamil community”, Dr. Kamala Ganesh, South Asia Books, 1993. 
4. 7 .03. 1999 அன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்வெட்டுகள். 
5. அகநானூறு 
6. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், ‘‘நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப'' என்ற நூற்பாவுக்கான நச்சினார்க்கினியர் உரை. 
7. ”Arguments for the Aryan origin of South Indian Megaliths”, Asko Parpola, Published by the State Dept. of Archaeology, Tamilnadu, 1970. 
8. கமலை ஞானப்பிரகாசரின் ‘சாதிநூல்', பதிப்பாசிரியர்கள்: சந்திரசேகர நாட்டார், சண்முக கிராமணி, மயிலை, 1870. (உ.வே.சா. நூலகத்தில் அச்சுப்பிரதி உள்ளது.) 
தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின்,  அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது.  இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன.  இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள்  இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன.
Adichanallur 06
இத் தளங்களைக் காலக்கணக்கிடுவது (dating) இன்னமும் முடிவாகவில்லை ஏனென்றால் இந்த ஆகழாய்வில் இருந்து எந்த புலப்பாட்டுச் சான்றும் கிட்டவில்லை. இருந்தபோதிலும், ஒரு சில தளங்கள் கரியம் 14 (C 14)  காலக்கணக்கீடு காட்டி உள்ளன. அவை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் சான்றளிப்பது போல் 1,600 BCE க்கும் முற்பட்டதாக இல்லை என முடிவு கட்டி உள்ளன.  அகழாய்வு செய்யப்பட்ட இரும்புக் காலத் தளங்களிலேயே ஆதிச்சநல்லூர் ஆகழாய்வுகள் சிறப்பு கவனத்தைப் பெறத் தக்கனவாக உள்ளன. அதுவே தமிழகத்தில் அண்மைக் காலம் வரையில் அகழாய்ந்த தளங்களிலேயே மிகப் பழமையானது. அண்மைக் கால அகழாய்வின் முடிவு, தமிழ் நாட்டில் தமிழ் நாகரிகத்தின் பழமை, வளர்ச்சி ஆகியவற்றின் மீது ஒரு மீவலிய விளைவை பெற்றிருந்தது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சுற்றுப் பகுதிகள் கற்கால ஊழியில் தொல்பழமையான இடத்தைப் பெற்றிருந்தன. சிறப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் சுற்றுப் பகுதிகள் நுண்கற்காலத்து மாந்தர் வாழிடங்களின் சான்றெச்சங்களைக் (vestiges) கொண்டுள்ளன. அங்கு நுண்கல் வகை சார்ந்த கற்கருவிகளை உள்ளிணைத்த மணற்குன்றுகள் உள்ளன. அக் கற்கருவிகள் செம்பட்டைக் கல் (Jasper), படிமக்கல் (agate), சூதுபவழம் (Carnellian), படிகக்கல் (crystal) மற்றும் கல்மம் (quartz) ஆகிய குறைமணிக் (Semi precious) கற்களால் ஆனவை. இவ்வகை கற்கருவிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. அவை சற்றொப்ப 12,000 முதல் 10,000 B.C.E. காலத்தன எனக் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவே நம் முந்து - வரலாற்று மூதாதைகள், சிறப்பாக, திராவிடர்கள் பிந்து அரப்பா நாகரிகக் கால பண்பாட்டுடன் ஒப்பிடத்தக்க பண்பாட்டுத் தனிகூறுகளைக் கொண்டிருந்த இடம். அரப்பா நாகரிகப் பண்பாட்டின் வீழ்ச்சி தமிழ் நிலத்தின் தென்கோடியில் அமைந்த ஆதிச்சநல்லூரின் திராவிட நாகரிகப் பண்பாட்டின் எழுச்சியோடு ஒன்றிப்பதாகத் (coincide) தோன்றுகின்றது. 
இங்ஙனமாக, ஆதிச்சநல்லூர் தமிழ் நிலத்துத் தொடக்க வரலாற்று வரைபடத்தில் முந்து தலைமை நிலையைப் பெறுகின்றது. அண்மையில் ஆதிச்சநல்லூரில் 2004 - ஆம் ஆண்டு மற்றும் அதைத் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் செய்திப் பத்திகளில் இடம் கொண்டன, அதோடு அரசின் கவனத்தையும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்தன. தொல்லியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தமட்டில் ஆதிச்சநல்லூர் ஒரு தொடரல்லாத தடைநிலை (checkered) வரலாறு உடையது. 
இனி, ஆதிச்சநல்லூர்த் தொல்லியல் அகழாய்வு வரலாற்றையும் அவற்றின் வரலாற்று முதன்மையையும் ஆய்வோம். ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து  24 அயிர் மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவில் தென்கிழக்கு திசையில் இடம் கொண்டுள்ளது. இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அதற்கும் மேல் இதன் மேற்குப்புறத்தில் அமைந்த தாமிரபரணி ஆற்றுக் கரையில் இடம் கொண்டுள்ளது. இங்கு பேர் எண்ணிக்கையிலான  புதைகலன்கள் (முதுமக்கள் தாழிகள்) கண்டறியப்பட்டன. அங்கு முற்காலத்தே வாழ்ந்த மக்களுடையது எனும் பொருளில் இதனைத் தாழிக்காடு என்கின்றனர்.
தொல்லியல் அகழாய்வுகள் இந்தப் புதை தளத்தில் 1876, 1899, 1903, 1904 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டு உள்ளன.   பின்னர் 1914 ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் இங்கு தொல்லியல் அகழாய்வுகளை நிகழ்த்தினர். அண்மைக் காலத்தில், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் (ASI) துறை இத்தளத்தில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தியது.
1914 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகள் 9,000 க்கு அதிகமான தொல்பொருள்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.  அவற்றுள் தாழியிற் புதைத்தல் தொடர்பான மட்கலன்கள், பொன்னாலான பொருள்கள், செம்பு வடிவங்கள், முருகப் பெருமானின் மூன்று முனை வேல், தாய்த் தெய்வத்தின் மட்கல வடிவங்கள், தொங்கும் விளக்குகள், முதலாயவை அடங்கும். இங்கத்து மட்கலத் தொழிலில் கருப்புநிற மட்கலன், சிவப்புநிற மட்கலன், தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்தின் தனிக்கூறான கருப்பு - சிவப்பு நிற மட்கலன் ஆகிய வகைகள் அடங்கும்.
அண்மைய (2004 மற்றும் 2005) அகழாய்வுகள் 150 க்கும் மேற்பட்ட புதைத்தல் கலன்களையும், கருப்பு - சிவப்பு நிற மற்றும் கருப்புநிற மட்கலன்களையும், செப்பு வளையல்கள், செம்புக் கோடாரிகள், இரும்பு வேல்கள் இவை தவிர, புதியகற்கால கற்கருவிகள் ஆகியனவற்றையும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தன. சிறு அளவு நெல் உமியும், அரிசியும் தவசங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்த பானைஓடுகள் எழிலூட்டும் வேலைப்பாடுகளையும், கீரல்குறிகளையும் இவை தவிர, மூல தமிழ் எழுத்துகளையும் பெற்றிருந்தன.
பேரெண்ணிக்கையில் வெண்கலத்தால் ஆன பொருள்களும்  புலி, எருமை, வெள்ளாடு, மான், சேவல் முதலாயவற்றை ஒத்த வடிவுகளும் முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்டன. மேற்சொன்ன பழம்பொருள், செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகத்தைப் பின்தொடர்ந்து  வெண்கல மற்றும் செம்பு ஊழிகள் (ages) நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது.
இத்தளத்தின் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு, அகழாய்வாளர் திரு. தியாக. சத்தியமூர்த்தியால் 1570 BCE  என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தளமே காலத்தால் பழமையானது அதோடு, புதியகற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம், செம்பு - வெண்கலக் காலம் தவிர, இரும்புக் கால நாகரிகங்களின் சான்றெச்சங்களையும் உடையதாக நாம் அறியும் தளமும் இது ஒன்றே ஆகும். அதைமுன்னிட்டு, ஆதிச்சநல்லூர் மக்கள் எல்லா மாழைகளையும் (Metals) பயன்கொண்டனர், அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து இருந்தனர். இங்கு திரட்டிய மாழைப் (Metal) பொருள்கள், ஆதிச்சநல்லூர் விறுவிறுப்பான உள்நாட்டு வணிக நடுவமாகவும், நகரமாகவும் திகழ்ந்தது என்பதைச் சுட்டுகின்றன.
இத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மட்கலத் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்கள் நிரம்பிய நகரமாகவும், நாடறிந்த நகரமாகவும் செழிப்புற்று விளங்கியது என்ற உண்மையைப் புள்ளியிட்டு குறிப்பிடுகின்றது. கருப்பு - சிவப்புநிற மட்கலன்களுடன் கூடிய பழந் தமிழ் எழுத்துப் பொறிப்போடு உள்ள பானைஓடுகள் பிந்து அரப்பா நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒருமைப் பண்பு உடையன என்பதைச் சுட்டுகின்றன. இவற்றில் பிந்து அரப்பா தளங்களில் காணப்படும் கீரல்குறிகளை அதிகம் ஒத்த கீரல்குறிகளைக் கொண்ட பானைஓடுகளும் உள்ளன.
ஆதலால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நடு இந்தியாவில் காணப்படுவது போன்றே புதிய கற்காலத்தைப் பின்தொடர்ந்து வெண்கல - செம்புக் காலம் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தி உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்து அரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதை நிறுவி உள்ளன.
இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இஃது அரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட்டால் தமிழனின் தொன்மை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்
சில தமிழின விரோதிகள் அந்த அறிக்கையை தடுத்து வைத்திருப்பதாகக் குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. அதை தமிழக அரசு அத் தடையை தகரத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசியல் நாளிதழில் எழுதப்பட்டுள்ள குறிப்புக்களின் முக்கியத்துவம் கருதி, அந்த இதழுக்கான நன்றிகளுடன் இங்கு மீள் பதிவு செய்கின்றோம்.

ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை ! : தடையைத் தகர்க்குமா தமிழக அரசு ?

தூத்துக்குடி மாவட்டம் உருவானதன் வெள்ளி விழாவையொட்டி, "நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை வைத்து ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்.

உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர்தான் உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடம். இதை பல அறிஞர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது மொகஞ்சதாரோவிற்கு முந்தைய நாகரிகம் என வங்கதேச அறிஞர் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் என்ற தங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் மாவட்ட மக்கள் இருக்கும் அதே சமயம், சில கோரிக்கைகளும் எழுந்துள்ளன!.

"ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்" என்ற நூலை எழுதிய பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு-விடம் பேசினோம்.

"நான் 2006-லிருந்து 2010௦-வரை நான்காண்டுகள் உழைப்புக்கு பின்னரே இந்த நூலை வெளியிட்டுள்ளேன். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வறிக்கை வெளியாகிவிடும், அதனையும் சேர்த்து நூல் வெளியிட வேண்டும் என்று காத்திருந்ததால்தான் நூல் வெளியீடு தாமதமானது. ஆனால் ஏழு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தும் இன்றுவரை அரசு அந்த ஆய்வறிக்கையை வெளியிடாதது வருத்தத்தை அளிக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே "அலெக்சாண்டர் இரியா" இங்கு ஆய்வு செய்த புகைப்படங்களை அனைத்தையும் வெளியிட்டுவிட்டார். ஏன் இன்னும் இந்தியா வெளியிடவில்லை?
மாவட்ட வெள்ளி விழாவை ஓட்டியாவது ஆதிச்சநல்லூர் ஆகல்வாராய்ச்சி ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும்.

இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க்கத்தக்கது. அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு வரலாற்று ஆர்வலர்கள், பள்ளி மற்றும் பல்கலைகழக மாணவர்களது படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு இது பேருதவியாக இருக்கும். வெளிநாட்டவர்கள் கூட இதனை பார்ப்பதற்கு வருவார்கள்.

மேலும் இப்பகுதியில் சிறு குழி கூட தோண்டக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடம் முழுவதையும் சுற்றி வேலி அமைப்பதால் இங்கு புதையல் இருக்கிறது என்ற புரளியில் அவ்வப்போது சிலர் குழி தோண்டுவது தடுக்கப்படும். ஆதிச்சநல்லூர் பகுதியில் ஒரு படித்துறை இருக்கிறது. இந்தப் படித்துறையை ஒட்டியே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் தோண்டி எடுக்கப்படுகிறது. இங்கு அருங்காட்சியகம் அமைத்து சுற்றுலா தளம் அமைக்கும்போது ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கவேண்டும்" என்றார் காமராசு.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாறு துறை பேராசிரியர் மருத்துவர் தேவராஜிடம் பேசினோம்.

"ஆதிச்சநல்லூர் சிறப்பு பற்றி தூத்துக்குடி மக்களுக்கே பலருக்குத் தெரியாது. மாணவர்களிடமும் விழிப்புணர்வு கிடையாது. காரணம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய பாடம் மாணவர்களுக்குக் கிடையாது. கல்லூரியில் கூட பி.ஏ. மூன்றாம் ஆண்டில் ஒரு பேப்பர், எம்.ஏ இரண்டாம் ஆண்டில் ஒரு பேப்பர் மட்டுமே உள்ளது. எனவே மாணவர்கள் அகழ்வாராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வழிவகை செய்யும் விதத்தில் "பீல்டு சைடு விசிட்" என்ற கல்லூரி பாடத்திட்டம் வேண்டும்.

இங்கு அமைக்கப்பட இருக்கும் மியூசியத்தில் இரும்பு, தங்கம், வெள்ளி, மண்பாண்டம் இவைகள் எல்லாம் எப்போது தோண்டி எடுக்கப்பட்டது என்றும், எந்த முறைகளில் தோண்டி எடுக்கப்பட்டது என்றும் தெளிவாக குறிப்பிடவேண்டும். அதேசமயம் இந்த அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை தூத்துக்குடி மாவட்டம் அல்லாது தமிழகம் முழுதும் ஏற்படுத்தவேண்டும். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மியூசியம் துவக்கப்பட்ட பிறகு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.

அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று நீண்டகாலமாக போராடிவந்த ஸ்ரீவைகுண்டம் பாரதி கலை இலக்கிய மன்றச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் பாரதிமுருகனிடம் பேசினோம்.

"மொகஞ்சதாரோ, ஹரப்பா போல ஆதிச்சநல்லூரையும் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். ஆட்சியரின் அறிவிப்பு எங்கள் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மொத்தம் உள்ள நூற்று பதினான்கு ஏக்கர் பரப்பளவில் இதுவரை வெறும் பத்து சென்ட் இடத்தில் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. எனவே மீதியுள்ள இடத்திலும் அகல்வராய்ச்சி பணிகளைத் தொடங்கவேண்டும்.

இங்கிருந்து ஜெர்மன் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க பொருள்களை கொண்டுவந்து இங்கு அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்.

ஏழு ஆண்டுகளாக வெளியிடாமல் இருக்கும் ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கையை இந்திய அரசு வெளியிடவேண்டும். இந்த ஆய்வின் நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டால் அறிக்கை தயார் செய்து வருகிறோம் என்றே பதில் தருகின்றனர். இப்போதாவது அதை உடனடியாக வெளியிட வேண்டும்" என்றார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த செம்மொழி மாநாட்டில் ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, தொகுதி எம்.எல்.ஏ, சுடலையாண்டி மற்றும் சத்தியபாமா ஆகியோர் அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தை பார்வையிட்டு...அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு சென்றனர். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெள்ளி விழாவையொட்டி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஆஷிஷ்குமார் அறிவித்துள்ளார்.
கடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. இன்று தமிழகத்தினுடைய அடையாளமாக சொல்லப்படுகிற இந்த ஊர்களெல்லாம் முன்பு எங்கு இருந்தனஎந்த ஊரை பழைய கொற்கையாகபழைய வஞ்சியாகபழைய முசிறியாகநாம் கருத முடியும் என்றால்நாம் நம்முடைய
அடையாளங்களாக, தேடிமீளாய்வு செய்து,இன்னும் சொல்லப்போனால்இன்று இருப்பதை வைத்து இருப்பதைக் கொண்டு அங்கு இருப்பதை நாம் அடையாளம் காணமுடியாது. கொற்கையைப் பார்த்துவிட்டுகொற்கையிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஆதிச்சநல்லூர் ஊர் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் தமிழகத்தினுடைய மிகத் தொன்மையான ஒரு புதைமேடு, 114 ஏக்கர் இருக்கக்கூடிய ஒரு பெரிய நிலப்பரப்பு. அவ்வளவும் இடுகாடுதான். முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

ஓர் ஊரில் இவ்வளவு பெரிய இடுகாடு இருக்கிறதென்றால் இதை ஒட்டி,மிகப்பெரிய மக்கள் வசித்திருக்கணுமில்லையாஒரு நகரம் இருந்திருக்கணுமில்லையாஇன்று சிந்துஹரப்பாவை ஆய்வு செய்யும்போதுஎன்ன சொல்றாங்கஹரப்பாமொஹஞ்சதாரோ என்ற நகரம்,இவ்வளவு செழிப்பாக இருந்திருந்தால் இங்கு ஓர் இனம் வாழ்ந்திருக்கணும்,அந்த இனம் பண்பாட்டில்மேலோங்கியிருக்கணும்கட்டடத்திலும் சரி எத்துறைகளிலும் சரி உயர்ந்து விளங்கியிருந்தால்இவ்வளவு பெரியதைக் கொண்டு வந்திருக்க முடியும். அப்ப இவ்வளவு பெரிய நகரம் ஆதிச்சநல்லூருக்குப் பக்கத்தில் என்ன இருந்ததுஎந்த நகரம் இருந்ததுஎந்த நகரத்தினுடைய இடுகாடு இதுபக்கத்தில் இருந்தஇன்றைக்கும் இருக்கிற,நகரம் கொற்கை என்றால் ஒரு காலத்தில் கொற்கை பெரிய நகரமாகபெரிய விரிவோடு இருந்ததாக இருந்தால் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆதிச்சநல்லூர் போன்ற ஒன்று பக்கத்தில் இருக்க முடியும்.

இந்த ஆதிச்சநல்லூர் ஊரைப் பார்க்கும்போதுஆதிச்சநல்லூரைப் பற்றி கல்வெட்டு இருக்கிறது. கல்வெட்டில் ஆதிச்சநல்லூரைப்பற்றிச் சொல்லும்போது குறிப்பு வருகிறது. வெள்ளூர் ஆதிச்சநல்லூர் எனக் குறிப்பிடுகின்றனர். வெள்ளூர் என்று குறிப்பிடும் சொல் சங்ககால இலக்கியத்திலும் வரக்கூடிய சொல். இந்த வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்கிற கிராமத்தை ஏன் வெள்ளூர்னு குறிப்பிடுறாங்கன்னாவெள்ளூர் என்ற இன்றைய பஞ்சாயத்திற்குட்பட்டதாக இந்த ஆதிச்சநல்லூர் இருக்கிறது. ஆனால் வெள்ளூர் என்ற சொல் பழந்தமிழ்ச் சொல். சங்க இலக்கியத்தில் வரக்கூடியதாக இருக்கிறது. கொங்கராயக்குறிச்சி பழமையான ஆதிச்சநல்லூரின் எச்சங்கள் இருக்கின்றதுகிடைக்கக்கூடும்அதே ஊரில் அவர்கள் சொன்னார்கள்:-இங்கே ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆறுதான் திசைமாறி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் நதியானது பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஓடத் தொடங்கியது. பொன்னையாப்பிள்ளை என்பவர் இந்த ஆற்றினுடைய கரையை மாற்றி திசை திருப்பி ஆற்றினுடைய போக்கை மாற்றினார் என்பதால் கோட்டை கட்டிக்கச் சொல்லி உரிமை கொடுத்தார்கள். அப்படி கோட்டை கட்டிக்கச் சொல்லி அவருக்குக் கொடுக்கப்பட்ட உரிமையின் காரணமாக சிறீவைகுண்டம் பக்கம் கோட்டை கட்டி,பொன்னையாப்பிள்ளையும்அவருடைய குடும்பத்தினரும் வசித்தார்கள். அந்த கோட்டை கட்டி வசித்த பிள்ளைகளின் பெயர்தான் கோட்டைப் பிள்ளைகள். கோட்டைப்பிள்ளைமார் கோட்டைக்குள்ளேயே பிறந்து கோட்டைக்குள்ளேயே வளர்ந்து பெண்கள் இறந்தால்கூட வெளியே வரமுடியாது. இந்த கோட்டைப்பிள்ளைகள் எப்படி உண்டானார்கள் என்று பார்த்தால் அவர் சொல்கிறார்: பாண்டிய மன்னர்கள் காலத்தில் இந்த தாமிரபரணி ஆற்றைத் திசை திருப்பி மாற்றம் செய்த பொன்னையாப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த உரிமைன்னு சொல்கிறார். இதனுடைய காரணமாக பக்கத்தில் பொன்னங்குறிச்சி ஊர் இருக்கிறது. நமக்கு என்ன தேவை இருக்குன்னாதமிழர்கள் தங்களுடைய ஊர்ப் பெயரையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கு. இந்த பொன்னங்குறிச்சி ஊருக்குள் இருக்கக்கூடிய பொன்னன் யாருஅந்தப் பொன்னனுக்குஇந்த ஊரினுடைய பெயர் எப்படி வந்ததுஇது ஆதிச்சநல்லூருக்குப் பொருந்துதான்னு பார்த்தாஆதிச்சநல்லூர்ல இன்னொரு குறிப்பும் சொல்றாங்க. ஆதிச்சநல்லூர் ஒரு காலத்தில்ஒரு சமணத் திருவுருவத்துடன் இருந்திருக்கிறது. இந்தப் புதைமேடை ஒட்டியே இருந்ததாகவும்இந்தப் புதைமேடையை ஒட்டி இருந்தசமண தீர்த்தங்கரரை பின்னர் வந்த யாரோ எடுத்துச் சென்று விட்டனர் என்று சொல்கின்றனர். எனக்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவும் சொல்றாங்க. நான் நாகப்பட்டினத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகஒரு சிலையைப் பார்ப்பதற்காக போதிமங்கலம் என்ற ஊருக்குப் போனேன். முதலில் இந்த ஊரில் போய் கேட்டோம். இங்கே இளவரசர் சிலை இருக்கு.

போய் பாருங்கன்னாங்க. இளவரசர் சிலையை நாங்கள் போய் பார்த்தால்அது புத்தருடைய சிலை. அவங்க சொல்றாங்கஇது வானத்திலிருந்து பறந்துவந்து ஓர் இளவரசன் எங்க ஊரில் விட்டுட்டான். இந்த இளவரசனை நாங்க பாதுகாத்து வச்சிருக்கோம் என்றார்கள். நாங்க சொன்னோம்இது புத்தருடைய சிலை. உங்க ஊர்ல புத்த மடாலயமும் அல்லது ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலமும் இருந்திருக்கும் என்று சொன்னோம். பாதுகாத்து வச்சுருங்க என்றோம். நாங்க இன்னும் பாதுகாத்து வச்சிருப்போம்னு சொன்னார்கள். ஒரு 5, 6 வருடங்களுக்கு முன்பாக திரும்பப் போனேன். நான் திரும்பிப்போகும்போது அந்த ஊரில் வழிபாட்டுத் தலத்தைத் தவிர, 6 அடி புத்தர் சிலையைக் காணோம்.

கேட்டபோது அந்த ஊர்க்காரர்கள் சொல்றாங்க. பறந்து தானே வந்தாருபறந்து போயிட்டாரு என்று. அய்யா! உங்களுடைய பகுத்தறிவு கொண்டு நீங்கள் யோசிக்க வேண்டாமாபெரிய சிலை எப்படிப் பறந்து வரும்! பறந்து வந்தது,பறந்து போயிடுச்சுய்யா! ஏன்னாநாங்க சொல்றோம்லஇதுதான் வானத்திலிருந்து வந்த இளவரசர்னுஅவர் பறந்து போயிட்டார். ஆகஇப்படி நம்ம கண்ணு முன்னாடியே பவுத்த மிச்சங்கள் எல்லாமேஅழிஞ்சி போயிட்டு இருக்கிறதைப் பார்க்கிறேன். இங்கேயும் இதே மாதிரி பவுத்தம்போல்மிச்சம் இருந்துட்டு இருக்கு ஆதிச்சநல்லூர்ல. அது காணாமல் போயிருச்சுங்கறாங்க,இந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் விரிவான ஆய்வைசத்தியமூர்த்தி அய்யா அகழ்வாராய்வுத் துறையில் போய் ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்கொண்டு நிறைய முதுமக்கள் தாழிகளை எடுத்துகிடைத்த,பாசிமணிகளைக் கொண்டு ஆய்வு செய்தார்கள். இன்றைக்கு வரைக்கும் நமக்கு இருக்கும் கேள்வி என்னன்னாஏன் இந்த ஆய்வைஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கிறார்கள்.

பொதுவாக ஓர் ஆய்வுவெளியாகி ஓர் ஆண்டுகளிலேயேஇல்லை ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஆய்வின் முடிவுகள் புல்லட்டின் என்று சொல்லக்கூடிய வெளியீடாக வெளியாகும். தமிழில் வெளியாகாவிட்டாலும்நாங்க மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஆங்கிலத்தில்தான் வெளியிடலாம்னு, 2004ஆம் ஆண்டிலிருந்து இவ்வளவு ஆண்டுகாலமாகவா இந்த அறிக்கையை வெளியிட மாட்டேங்கிறாங்க என்றால் இந்த ஆய்வறிக்கையின் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. நண்பர்களேஇது வெளியானால் சிந்துசமவெளி,ஹரப்பாமொகஞ்சதாரோவைவிட பழமையானதுஒருவேளை,ஆதிச்சநல்லூர் தமிழனுடைய தொன்மையான நாகரிகத்திற்கான சான்றாகும். அதை வெளியிடாமலே வைத்திருக்கிறார்கள். இன்னொன்று இந்த நிலப்பரப்பில் 114 ஏக்கரில் ஆய்வு செய்யப்பட்டது. பார்த்தீங்கன்னாஒரு 10அடி, 100 அடிக்குள்ளதான் ஆய்வு செய்திருக்கிறார்கள்ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் சிந்துசமவெளியை ஆய்வு செய்வதற்குக் கொடுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள்சிந்து,ஹரப்பாவையும் சரிஇதற்கப்புறம் போஸ்ட் ஹரப்பான்னு சொல்லக்கூடிய லோத்தல் மாதிரிகுஜராத்தைச் சார்ந்த இடங்களும் சரிஆய்வு செய்றாங்க. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நாகரிகம் இருக்கிறது. இந்த இடம் சிந்து சமவெளியைவிட புராதனமானது. இரண்டு உதாரணங்களை தொ.பரமசிவம் சொல்கிறார்.

ஒன்றுஇரும்பை உருக்குகிற எஃகு தொழில்நுட்பம்சிந்துசமவெளியில் இருந்திருக்கு. அப்படி இரும்பை உருக்குகிறபோதுஎன்ன பதத்தில் உருக்க வேண்டும்எவ்வளவு உஷ்ணம் வேணும்உருக்குகிறபோது இரும்பை,உருக்குகிற இரும்பைஎப்படி ஒரு கருவியாக செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை சிந்துசமவெளியினுடைய எங்கேயிருந்தும் இரும்பைக் கண்டுபிடித்தாலும்,ஒரே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் சிந்துசமவெளிக்கு வெளியில் எங்கே இருக்கிறது என நான் தேடிப் பார்க்கிறேன். சிந்துசமவெளிக்கு வெளியே இருக்கக்கூடிய கங்கைப் பகுதியில் இல்லைஇந்தப் பக்கம் வந்தால்மத்திய இந்தியாவில் இல்லைவட இந்தியாவில் இல்லைதென்னிந்தியாவிலும் வேறு மாகாணங்களிலும் இல்லை. சிந்துசமவெளியைப் போலவேஅதே இரும்பை உருக்குகிற தொழில்நுட்பத்தைஅதேபோலஸிணீவீஷீ எனச் சொல்லக்கூடியகலப்பு முறை தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் மட்டும்தான் இருக்கிறது எனச் சொல்றாரு. அப்ப என்ன இருக்கிறதென்றால்சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட அதே அளவுமுறைகள் ஆதிச்சநல்லூரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால்தமிழன் இங்கிருந்து சிந்து சமவெளிக்குச் சென்றிருக்கிறானா அல்லது சிந்துசமவெளி தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததாஎன்ன நடந்ததுஇப்போ அந்த செங்கற்களையெல்லாம் அளவிடுகிறார்கள். சுட்ட செங்கற்களைசிந்து சமவெளியில் கிடைத்த அதனுடைய அளவை எடுத்துபருமனும்நீளமும் ஒரே அளவாக இருக்கிறது எனச் சொல்றாங்க. எங்கே கல்லை எடுத்தாலும் சிந்துசமவெளிஒரே மாதிரியானசுடு செங்கல் உருவாக்கப்பட்டிருக்கு. அதே செங்கல் அதே அளவுகளில்ஆதிச்சநல்லூர்ல கிடைக்கிறதுஅப்போ ஆதிச்சநல்லூர் என்பது சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இணையானஇன்னும் சொல்லப்போனால் அதைவிட மூத்த ஒரு நாகரிகம். அந்த நாகரிகத்தைஅந்த நாகரிகத்தினுடைய முடிவுகளை நாம் பார்க்கிறோம். நான் ஏன் தெரிஞ்சுக்கலைஇன்றைக்கு நாம் திரும்பத்திரும்ப என்ன சொல்றோம்நாம நம்ம பண்பாட்டு வேர்களை இழந்துட்டோம். நம்ம உடையை மாத்திட்டோம்.

எல்லாவற்றையும்விட அடிப்படையையே கைவிட்டு விட்டோமே?அடிப்படையாக தமிழர்கள்தமிழர்களுடைய உரிமைக்காக நிலைபெறவும்,அடையாளப்படுத்தவும் வேண்டிய விசயத்தையே கைவிட்டு விட்டோம்,இதெல்லாம் மேலான விஷயங்கள். அடிப்படையான விஷயங்களைக் கைக்கொள்ளவும்மீட்டெடுக்கவும்இன்னும் சொல்லப்போனால்இன்று இருக்கக்கூடிய ஊடகத்தளத்திற்குக் கொண்டு வரும்போதுதான் தெரியும். நாம் யாருநம்முடைய பூர்வீகம் எதுநம்முடைய அடையாளங்கள் எது?பண்பாட்டுத்தளத்தில் எப்படி இருக்குவரலாற்றுத் தளத்தில் எப்படி இருக்கு?கொஞ்சம் கொஞ்சமாக பகுத்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவான். என்னுடைய மொத்தத் தேடுதலின் ஒரு பகுதியாகஇன்னொன்றையும் தேடினேன். நூலாக எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொண்டு,பூம்புகாரிலிருந்து தொடங்கி வஞ்சி வரைக்கும் இருக்கக்கூடிய கண்ணகி,கடந்து சென்ற பாதையை, 7 ஆண்டுகளும் மீளாய்வு செய்திருக்கிறேன். பூம்புகாரிலிருந்து எப்படியெல்லாம் கண்ணகி போயிருப்பாள்எந்த வழியாகச் சென்றாள்நிஜமாபொய்யா என்ன நடந்ததுசங்க காலத்தில் நிலங்கள்சங்க காலத்தின் நிழற்படங்கள் எல்லாம் இருக்கிறதாஇல்லைன்னா சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய இடப்பெயர்கள்ஊர்ப்பெயர்கள்அதில் குறிப்பிட்டதெல்லாம் நிஜந்தானாஓர் உண்மையை அதிலிருந்து சொல்ல விரும்புகிறேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய வழிகளில் ஒரு 70, 80 சதவீத வழிகளில்அப்படியே இன்றைய தமிழகத்தில் இருக்கிறது. வழிகளெல்லாம் மாறவேயில்லை. பேர் மாறியிருக்கு. பஸ் போக்குவரத்து மாறியிருக்கு. ஆனால் அதே போக்குவரத்து சாலைகள்போக்குவரத்து சாலையில் இருந்த ஊர்கள். அங்கே தென்பட்ட மலைகள். அந்த மலையைக் கடந்து வரக்கூடிய பயம். அங்கிருந்த தெய்வம் உட்பட எல்லாம் இருக்கிறது. அப்ப தமிழ் நிலம் மூடப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க்கை ஒரு புகையால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ் தன்னுடைய அடையாளங்களை எல்லாம் இழந்து வேறு அடையாளங்களைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகையை விளக்கினால்இந்தத் தூசிகளை அப்புறப்படுத்தினால்இந்த அழுக்குகளை நீக்கி தண்ணீரைச் சுத்தம் செய்தால்,அடியில் மாறாத-இன்னும் சொல்லப்போனால்நம்முடைய தொன்மை வடிவங்கள் அப்படியே இருக்கிறது. இதைக் கண்டுபிடித்து மீளாய்வு செய்து,எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்புஆய்வாளர்களுடைய பொறுப்பல்லநம் அனைவருடைய பொறுப்பு. நாம் அனைவருமே,நம்முடைய பண்பாட்டு வேர்களை ஆராயவேண்டிய கடமையில் இருக்கிறோம். உங்கள் வீதிக்கு ஏன் பெயர் வந்ததுஉங்கள் அப்பாவுக்கு ஏன் பெயர் வந்ததுஉங்களுடைய சமயசடங்குகளை எப்படி அறிமுகப்படுத்தியதுஏன் இந்த சடங்குகள் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போதுநாம் புனிதமாகக் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சடங்காகச் செய்யும்போதுபலியாக கருதுகிறோம். இதற்குப் பின்னாடிஅன்றாடத் தமிழனின் வாழ்க்கையை ஒருவன் ஆராயாமல் அவனால் தமிழ் அடையாளங்களைக் கைக்கொள்ள முடியாது. இன்றைக்கு நடந்தது. நாம் கைவிட்டோம்நம்முடைய பிள்ளைகள் கைவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இது எல்லாமே தகவல்களாகப் போய்விடும்.

சொல்லப்போனால் நான் பார்த்த ஒடிசா ஆதிவாசிகளைப்போல,அவர்களுக்குத் தமிழ் என்பது புராதன அடையாளமாக இருக்கிறதே தவிர,இன்றைக்கு ஒன்றுமே இல்லை. கேட்டேன். அவன் விறகைச் சுமந்து கொண்டு வந்தான். தோளில் அந்த விறகைச் சுமந்து கொண்டு வரக்கூடிய முறையினுடைய பெயர் என்ன என்றுஅவன் சொல்கிறான். காவடி என்று,காவடி என்ற சொல் அவனிடம் இருக்கிறது. ஆனால் காவடி என்றால் தமிழ்ச் சொல் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு தமிழ்ச்சொல். தமிழ்ச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதுதான் தெரியாது. இந்த நிலைக்குத் தமிழர்களே போய்விடுவோம்! இது எங்கோ இருக்கக்கூடிய பழங்குடியினர் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு இப்படி ஓர் அச்சுறுத்தலை நாமே கொடுக்கிறோம். ஓர் எழுத்தாளனாக என்னுடைய பெரிய வருத்தமே என்னன்னா நம்முடைய வீட்டிலிருந்து தமிழ் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றால் அது நம்முடைய அழிவினுடைய முதல் புள்ளி. ஒரு சமூகத்திலிருந்து வெளியேறும்போதாவதுசமூகக் காரணிகளைபின்னாடி இருக்கக்கூடிய பதவி ஆசையைபொருள் தேடும் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்பம் ஒரு மொழியை அதுவும் தமிழ் மக்கள்இத்தனை ஆண்டுகாலமாக தமிழைக் கற்றுக் கொண்டுதேர்ந்த குடும்பம் ஏன் கைவிடுகிறதுஒரு காரணமும் இல்லாமல் கைவிடுகிறோம்சீனர்கள் எங்கே போனாலும் சீன நகரத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சீனப் பண்பாட்டை உருவாக்கி விடுகிறார்கள்.

சீன மொழியை உருவாக்கி விடுகிறார்கள். நான் முந்தா நாள் மலேசியாவில் போய்கருத்தைச் சொல்லும்போதுஓர் இளைஞர் ஆவேசமாக என்னிடம் சொன்னார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழர்கள் இருக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு கிடையாது. ஒருவேளை நாடு கிடைத்தால் நாம் அந்த உரிமையைப் பெறுவோம் என்று சொல்கிறார். என்ன சொல்கிறீர் நண்பரே விரிவாகச் சொல்லுங்கள் என்றேன். அப்போ அவர் சொல்கிறார்,நாங்கள் இன்னொரு தேசத்தில் வசிக்கிறோம்எங்கள் நாட்டில் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால்எங்கள் நாட்டோடுதான் ஒப்பந்தம் போட வேண்டும். நாங்கள் தமிழகத்தோடு ஒப்பந்தம் போட்டால் அரசு சொல்கிறது மாநிலத்தோடு ஏன் ஒப்பந்தம் போட வேண்டும். ஒரு நாட்டோடுதானே ஒப்பந்தம் போட வேண்டும்என்று.

இவ்வளவு கோடி பேர் தமிழர்கள் வசிக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே என்று ஆதங்கப்பட்டார். இந்த ஆதங்கம்நண்பர்களேஇதுவும் ஓர் அரசியல்தான். இந்த அரசியலையும் நாம் மேலோட்டமாகப் பார்த்து யாரோ ஒருவர் கூட்டத்தில் ஆதங்கப்படுறாரேன்னு போயிட முடியாது. ஆழமாக சமகால உண்மைகளைசமகால வலியை நாம் புரிந்து கொள்ளத் தொடங்கினால்நாம் அடுத்தகட்டத்தை நோக்கி நகருவோம்.
"தென்னிந்தியாவில் மிகப்பெரிய பழமையான நாகரிகமாகச் சிறந்து விளங்கியது பொருநைக் கரையே" என்று கால்டுவெல் கூறுவார். பொருநை நாகரிகத்தைக் கொண்டுதான் திருநெல்வேலிக்குச் சீமை என்ற சிறப்புப் பெயர் வரப்பெற்றுள்ளது.
தமிழர்களின் நாகரிகத்தைப் பறைசாற்றும் அடையாளமே ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர்தான். தற்போது இவ்வூர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ளது.
பொருநையின் தென்கரையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் நெல்லையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் பொன்னக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் மேட்டுப்பாங்காக அமைந்துள்ளது இவ்வூர். வரலாற்றுத் தொல்லியல் தொன்மையில் இதுவே முதன்மை ஆதாரமாகும்.
19ம் நூற்றாண்டில் இப்பகுதியில் இருப்புப் பாதை அமைக்க மண்ணைத் தோண்டும்பொழுது சரித்திர சம்பந்தமான பழம் பொருள்கள் சிக்கின. கி.பி. 17ம் நூற்றாண்டில் ஆதிச்ச நாடார் என்ற பரம்பரையினர் பற்றிய கல்வெட்டுகள் இங்கே உள்ளன. எனவே அந்தக் குடும்பத்தின் பெயரால் இவ்வூர் இப்பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உண்டு.
இப்பகுதியில் பறம்பு என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வூரில் தொல்லியல் ஆதாரங்கள் 18ம் நூற்றாண்டிலேயே கண்டறியப்பட்டது. வெள்ளூர் என்ற கிராமத்தின் உள்ளமைப்பே இந்த ஆதிச்சநல்லூர் என வருவாய்த் துறை ஆவணங்கள் சொல்கின்றன. இந்த வெள்ளூரில் இறந்தவர்களுடைய உடல்கள் முதுமக்கள் தாழியில் வைத்து இவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கு அருகே உள்ள கொங்கராயன்குறிச்சி, பொருநை ஆற்றின் வடபுறத்தில் அமைந்திருந்தாலும் அக்கிராமத்திற்கும் ஆதிச்சநல்லூருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும் அங்கு கட்டடங்கள் கட்டுகின்ற செங்கற்கள் ஆதியில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த பழங்கால மனிதனின் சான்றுகள் இன்று வரை கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள்.
சாயர்புரம், திருவைகுண்டம் ஆகிய ஊர்களில் புரூஸ் புட் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூரில் இரும்புக் காலப் பொருள்களும், செம்புக் காலப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதுமக்கள் தாழிகள் பிரதானமானது. தொன்மையான நாகரிகத்தின் சின்னங்களாயுள்ள பல பொருள்களும், ரோம நாணயங்களும், இரும்புக் கருவிகள், நவரத்தின மணிகள் முதலியவைகளும் கிடைத்துள்ளன. கி.மு. 1200லேயே ஆதிச்சநல்லூரில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த அகழ்வாராய்ச்சிக் களத்தை, ஜெர்மனியைச் சார்ந்த ஜாகர் 1876ல் வெளிக்கொணர்ந்தார்.
அவருக்குப் பின்பு 1889 - 1905 வரை அலெக்சாந்தர் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின், தாஸ்டர், சக்கர்மேன் இப்பணிகளை மேற்கொண்டனர். பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த லூயி, பணிகளாலும் பல உண்மைகள் தெரியவந்தன. இங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி தலைமையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
ஆதிச்சநல்லூரில் மூன்று கட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரி சத்யபாமா பத்ரிநாத் குழுவினர் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 60க்கு 60 பரப்பளவில் மட்டும் 150 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றி குவியல் குவியலாக அருகருகிலேயே கிடைத்துள்ளன. எனவே இந்த இடம் பண்டைக் காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களின் இடுகாடு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதுமக்கள் தாழிகளின் அடர்த்தியான எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆதியில் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பண்டைய பயன்பாட்டுப் பானை ஓடுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 137 பெரிய பானை ஓடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. பானை ஓட்டுக் குறியீடுகளைக் கொண்டு பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டன. இங்கு விதவிதமான எழுத்து அல்லது கீறல் வடிவங்கள் கொண்ட பல்வேறு எழுத்து ஓடுகள் வெவ்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. ஆனால் இந்த அனைத்து வடிவக் கீறல்களும் கொண்ட பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் என்ற ஒரே இடத்து அகழ்வாராய்ச்சிக் களத்தில் கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு அம்சம் என்று கருதப்படுகிறது.
ஆய்வில் கிடைத்த தகவல்கள், பொருள்கள் முதலியன மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ள தெர்மோ லுமினிகள் என்ற ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை முழு ஆய்வு செய்த அந்த மையம் ஆய்வறிக்கையை அனுப்பி வைத்தது. அதன்படி இவ்வாழ்வியல் தளம் கி.மு. 500ம் ஆண்டுவாக்கில் புழக்கத்தில் இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆதிச்சநல்லூரில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் தழைத்தோங்கித் தொடர்ந்து இயங்கியது என்ற வரலாற்று உண்மை உரிய தொழில்நுட்பச் சான்றுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.
பண்டையத் தமிழர்களின் புதைகுழிகள் தொடர்பாகச் சங்க இலக்கியங்களில் பல்வேறு நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள புதைகுழிகளில் இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர். சங்க இலக்கிய வருணனைகள் என்பவை வெறும் கற்பனையல்ல, உண்மையின் விவரிப்புகளே என்பதை நிரூபிக்க ஆதிச்சநல்லூர், ஆதார நல்லூராய் விளங்குகிறது.
ஈரோடு போன்ற பல்வேறு இடங்களில் குகையினுள் வரைவுக் காட்சிகளைக் காணலாம். இதேபோன்ற மெகா லிதிக் வரைவுக் குறியீடுகளை ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளிலும் பார்க்க முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக மக்கள் ஓர் ஒன்றுபட்ட உணர்வுடனும், பரந்துபட்ட ஒரே கலாசாரம் மற்றும் கருத்துப் பரிமாற்ற அடையாளங்களுடனும் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
முதுமக்கள் தாழிகள் பலவற்றில் மனித எலும்புக் கூடுகள் முழுமையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாகப் பத்து மனித எலும்புக் கூடுகள் திரட்டப்பட்டன. இவற்றை ஆய்வு செய்வதன் மூலமாக அந்த எலும்புக் கூடுகளுக்கு உரியோர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். இங்கு கிடைத்த ஒரே ஒரு முதுமக்கள் தாழி கவனத்தைக் கவரும் விதமாகப் புதுமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அந்த முதுமக்கள் தாழியின் உள்பக்கமாகக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ளும் வகையில் கைப்பிடி அமைப்புகள் காணப்படுகின்றன. வேறு எங்கும் இதுபோன்ற அமைப்பைக் காண முடியாது.
ஆதிச்சநல்லூரில் நடந்த முதல்கட்ட அகழ்வாராய்ச்சியின்போது,
கொற்கை, மாறமங்கலம், கழுகுமலை அருகே உள்ள பழங்கோட்டை, கரட்டு மலையிலும், முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
ஆங்கிலேயே அரசு 1876ல் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில்,
  • ஆதிச்சநல்லூர்
  • சேரன்மகாதேவி
  • தூத்துக்குடி
  • இங்குள்ள புதுக்கோட்டையை அடுத்துள்ள நல்லமலை
போன்ற இடங்களில் வரலாற்று ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுத்தது. இம்மாதிரி குமரி மாவட்டத்தில் உள்ள, குலசேகரம், திருவெட்டாறு, தோவாளை போன்ற பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
கரிவலம்வந்த நல்லூரில் காட்ரின் மன்னரது காசுகள் கிடைத்துள்ளன. தமிழரின் வணிக வரலாற்றுக்கு இது ஆதாரமாக உள்ளது.
  • நெல்லை
  • நாங்குநேரி
  • வள்ளியூர்
  • தென்காசி
  • அம்பை மற்றும்
  • விருதுநகர் அருகேயுள்ள பாவாலி
  • வெல்லூர்
  • செங்குந்தபுரம்
  • சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம் பண்ணை
  • செவல்பட்டி
  • மேட்டுப்பட்டி
  • இருங்குடி
  • சிவகாசி அருகேயுள்ள எதிர்கோட்டை
  • திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி
  • மல்லி
  • நத்தம்பட்டி
  • இராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம்
  • கொள்ளகொண்டன் தேவதானம்
  • இராஜகுலமாரன்
  • சேத்தூர் ஆகிய இடங்களில் அகழ்வராய்ச்சி ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவையாவும் ஒரு சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
இந்தியத் தொல்லியல் துறை இந்தப் பணியில் இறங்கிப் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஆராய்ச்சிகளை நடத்தியவண்ணம் இருக்கிறது. இந்த அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதை முழுமை பெறும் வகையிலும், பயன்பெறும் வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வளவு முக்கியமான ஆதிச்சநல்லூர் வெறும் கட்டாந்தரையாக இல்லாமல் பன்னாட்டு அளவில் கீர்த்தி சேர்க்கின்ற வரலாற்று ஆய்வு மையமாகவும், உலகத்தினர் அனைவரையும் ஈர்க்கின்ற வரலாறு, கலாசாரக் கல்வியை வழங்கும் கலாசாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களை அங்கேயே ஓர் அருங்காட்சியகம் அமைத்து வைக்க வேண்டும். மேலும் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள பொருள்களையும் இந்தக் காட்சியகத்திற்குக் கொண்டு வந்து அவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், மார்கோபோலோ, யுவான் சுவாங் போன்றவர்கள் குறிப்பிட்டுள்ள இப்பகுதியிலுள்ள கொற்கை, பழைய காயல் போன்ற பகுதிகளைப் பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மட்டுமல்லாமல் வேறு வகையிலான வரலாற்று ஆய்வுகளும் நடத்தினால் இன்னும் அற்புதமான செய்திகள் கிடைக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.


1 கருத்து:

  1. அய்யா ,

    தங்களின் படைப்புகளை தொடர்ந்து படிப்பவர்களில் யானும் ஒருவன் .

    ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி என்பது
    சாதாரண செய்தி அல்ல .

    எம்மாதிரியான பகுதியானாலும்
    அந்த பகுதியின் விபரங்களை , எளிய நடையில் ஆய்ந்து கருத்திடுவது தங்களது நடையாகும் .

    அந்த நடை , தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை போற்றி புகழ் பாடும் என்பதில் ஐயமில்லை .

    தொடர்ந்து பயணித்திட அடியேனின்

    ஆழ் மனதின் வாழ்த்துகள்.


    அன்புடன்

    எல்.தருமன்
    18..பட்டி..
    9585725060

    பதிலளிநீக்கு