வியாழன், 18 ஜூலை, 2013

காமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம் - கோ.ஜெயக்குமார்.

 காமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம் - கோ.ஜெயக்குமார்.
 1903: காமராஜர் விருதுபட்டி என்ற ஊரில் சிவகாமி அம்மையாருக்கும் - குமாரசாமிக்கும் மகனாகப் பிறந்தார்.

1909: காமராஜரின் தந்தையார் மறைந்தார்.

1919: காங்கிரஸ் இயக்கத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது காமராஜருக்கு வயது 16.

1920-22: ஒத்துழையாமை இயக்கத்திலும், கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

1930: உப்புச் சத்தியாக்கிரகம், காமராஜருக்கு ஏற்பட்ட முதல் சிறை அனுபவம். அப்போது காமராஜருக்கு வயது 27. 1932: திருவில்லிப்புத்தூர் வெடிகுண்டு வீச்சில் சிறை சென்றார். 1936: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரானார்.

1937: விருதுநகரிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940: இரண்டாவது உலகப் பெரும் போர் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காகச் சிறை சென்றார்.

1941: விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942-45: ஆகஸ்டு புரட்சியில் சிறை சென்றார்.

1945: அரசியல் நிர்ணய உறுப்பினராக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946: விருதுநகர் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947: அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்வு பெற்றார்.

1950: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1952: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1953: ஏப்ரல் 13ஆம் நாள், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1954: இலங்கையிலும் மலேசியாவிலும் சுற்றுப் பயணம் செய்தார்.

1957: இரண்டாவது முறையாகத் தமிழக முதல்வரானார். 1962: மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார்.

1963: காமராஜர் திட்டத்தின்படி முதல்-அமைச்சர் பதவியிலிருந்து அவரே விலகினார்.

1964: அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். புவனேஸ்வரம் மாநாட்டில் அனைத்திந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று பேருரை நிகழ்த்தினார். பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கினார்.

1968: அனைத்திந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். லால்பகதூர் மறைவுக்குப் பின்னால் இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார். சோவியத் நாட்டில் மாஸ்கோவில் மகத்தான வரவேற்பைப் பெற்றார். பல்கேரியா, ரோமாபுரி, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1967: ஜபல்பூரில் காங்கிரஸ் கட்சியின் பத்து அம்சந்திட்டங்களை உருவாக்கினார்.

1969: நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

1975: அக்டோபர் 2ஆம் நாள் காந்தியடிகள் பிறந்தநாளில் காமராஜர் மறைந்தார். காமராஜர் தாம் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகளை நாட்டுக்காக, மக்களுக்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு தமது 73-வது வயதில் மறைவெய்தினார்.

பணக்காரன் சாப்பிடற பொருள்:

ஒருநாள் காமராஜர் அறையில் இருந்த போது, மதுரைக்காரர் ஒருவர் அவரை பார்க்க வந்தார். வந்தவர் ஒரு தாம்பாள தட்டு நிறைய ஆப்பிள் பழத்தையும், அதன் மேல் வெற்றிலை பாக்கும் ஒரு கல்யாண பத்திரிகையையும் வைத்து நீட்டினார்.

பத்திரிகையை எடுத்துக்கொண்ட காமராஜர் "ஏய்யா இவ்வளவு ஆப்பிள் வாங்கி வந்தே... இதெல்லாம் பணக்காரன் சாப்பிடற பொருள்யா... ஒரு ஆப்பிளுக்கு நாலு எலுமிச்சம் பழம்ன்னாலும் இதுக்கு ஐம்பது எலுமிச்சை பழமாவது வருமேய்யா! எலுமிச்சை பழம்ன்னா ஜுஸ் புழிஞ்சி நானும் சாப்பிடலாம், வர்றவங்களுக்கும் கொடுக்கலாமேய்யா...

பணத்தை செலவு செய்யறது பெரிசில்ல... அதை முறையா செய்யணும்யா'' என்றார். ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டு, "இதே ஆப்பிளை வேறு யாராவது வி.ஐ.பியைப் பார்ககப் போனா யூஸ் பண்ணிக்கோ'' என்றார்.

தாயை அழைக்காதது ஏன்?:

தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான காரியத்தில் ஈடுபடக் கூடாது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். இதனாலேயே தான் முதல்வரான பிறகும் கூட அவருடைய தாயார் சிவகாமியை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.

ஒருமுறை அவரைப் பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விருநகருக்குச் சென்றிருந்தார். அவரிடம் சிவகாமி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டு, `என்னை எதுக்காக இங்கேயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல, என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்' என்று கூறியிருந்தார்.

இந்த விஷயத்தை, சென்னைக்கு வந்த பிறகு காமராஜரிடம் கூறினார் அந்தப் பிரமுகர். அதற்கு அவர் நிதானமாகப் பதில் சொன்னார். `அடப்போப்பா. எனக்குச் தெரியாதா, அம்மாவைக் கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு. அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க. அவங்ககூட நாலுபேரு வருவான்.

அப்புறமா அம்மாவைப் பார்க்க, ஆத்தாவைப் பார்க்கன்னு பத்துபேரு வருவான். இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்கற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டுல இருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான். எதுக்கு வம்புன்னுதான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்' என்றார்.

டாக்டர் பட்டம் வேண்டாம்:

காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரை தேடி வந்தனர். அவர்களிடம் பெருந்தலைவர் டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம்.

நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களை கண்டு பிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். போய் வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
 நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ, மக்களோ, தொண்டர்களோ, காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான `இந்து' பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார்.

நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை `இந்து' கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். "சாகும்போது கடன்காரனாக சாக விரும்பவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்'' என்றார்.

பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. `அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்' என்றார். சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்.

அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, `எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்' என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது `ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்' என்றார் கஸ்தூரி ரங்கன்.

அதற்கு பெருந்தலைவர் `அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்' என்று யோசித்தவர் `ஒன்று செய்யுங்கள். உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்' என்றார். கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி.

இடத்தை யாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை அவரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார்.

யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் `எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள `தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்!. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.
 நீதி, நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு அத்தனைக்கும் சொந்தக்காரர்.....' என்று தங்கள் கட்சி தலைவர்களைப் பற்றி தொண்டர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது உண்டு. மேடையில் தலைவரைப் பாராட்டும் பேச்சாளரின் புகழ் மாலைக்கு பரிசாக உடனே கரகோஷம் கிடைக்கும். ஆனால்... மேடையில் முழங்கிய அந்த வார்த்தைகளுக்கும் அவர் குறிப்பிட்ட தலைவருக்கும் கொஞ்சமாவது தொடர்பு இருக்குமா என்பது கேள்விக் குறிதான்.

நாட்டின் மீது உறுதியான பற்று, மக்கள் மீது உண்மையான அக்கறை, நீதியை மதிக்கும் தன்மை, அனைவரிடமும் நேர்மை... இன்னும் ஒரு தலைவருக்கு எத்தனை நல்ல பண்புகள் தேவையோ அத்தனையையும் தன்னிடம் கொண்ட செயல்வீரர் பெருந்தலைவர் காமராஜர். இது அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் உண்மை.

15-6-1903-ல் விருதுபட்டி என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த காமராஜர் 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஆனார். பின்னர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை செய்த இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து பலமுறை சிறை சென்றார். காமராஜர் தனது இளமை காலத்தின் 9 ஆண்டுகளை சிறை கம்பிகளுக்குள்ளேயே கரைத்தார்.

செய்த குற்றத்துக்காக சிறை சென்றவர்களுக்கே 'தியாகச்செம்மல்' பட்டம் கொடுக்கும் இன்றைய அரசியலுக்கும்; வெள்ளையர்களை எதிர்த்து கடுமையான தண்டனைகளை அனுபவித்த அன்றைய அரசியலுக்கும் எவ்வளவு நீளமான ஏணியை வைத்தாலும் எட்டாது. அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு சிறை தண்டனையை பெருமையாக ஏற்றுக் கொண்ட காமராஜர், சிறையில் இருந்த போதும் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே சிந்தித்தார்.

கட்சித் தொண்டராக இருந்த காமராஜர் இந்திய விடுதலைக்குப்பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.

சிறு வயதில் வறுமை காரணமாக 6-வது வகுப்பு வரை மட்டுமே படித்தார். என்றாலும், சிறை வாழ்க்கையின் போது தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார்.

தான் படிக்க முடியாமல் போனது போன்ற நிலைமை, தமிழ்நாட்டில் யாருக்கும் வரக்கூடாது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கம் காமராஜரின் மனதில் நிலைத்திருந்தது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் முதல்-அமைச்சர் பதவி அவரைத் தேடி வந்தது. 13-4-1953 (தமிழ்ப் புத்தாண்டு) அன்று தமிழ் நாட்டின் முதல்-அமைச்சராக காமராஜர் பதவி ஏற்றார்.

காமராஜர் 3 முறை முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றார். மொத்தம் 9 பேரை அமைச்சர்களாக கொண்ட இவரது தலைமையிலான ஆட்சி தமிழ் நாட்டில் 9 ஆண்டு காலம் நடந்தது. இவரது ஆட்சி காலத்தில் ஏழை குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதற்காக இவர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

இவர் தனது ஆட்சிக்காலத்தில் 6000 பள்ளிகளைத் திறந்தார். 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்தார். தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆக உயர்ந்தது. அதன் பலனாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக அதிகரித்தது.  பள்ளிகளில் வேலை நாட்கள் 180லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் போது கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், புதிய அணைகளான மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 முக்கிய நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவர் காலத்தில் தமிழகத்தில் பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனை கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

முதல்-அமைச்சர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி 'காமராசர்  திட்டம்' என்ற புதிய திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப் பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு காமராஜர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தனது பொறுப்பினை 2-10-1963 அன்று பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார்.

அதே ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் ஆனார்.

1964ல் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக்கினார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு அன்றைய தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனை கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர்.

இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் 2-ந்தேதி காந்தியின் பிறந்த நாளில் காமராஜர் மரணம் அடைந்தார்.

அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தையும் ஒரு சில வேட்டி, சட்டைகளையும் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்தவித சொத்தோ வைத்திருக்கவில்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

இன்று கவுன்சிலர் பதவி கிடைத்தாலே கார், பங்களா, குடும்பங்களுக்கு 7 தலைமுறைக்கான சொத்து என்று இறங்கி விடுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய பதவிகளை வகித்த பெருந்தலைவர் காமராஜர் தனக்காகவும் எதையும் சேர்க்கவில்லை. குடும்பத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான காரியத்தில் ஈடுபடக்கூடாது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். இதனாலேயே தான் முதல்வரான பிறகும் கூட அவருடைய தாயார் சிவகாமியை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.

ஒருமுறை அவரைப் பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விருதுநகருக்குச் சென்றிருந்தார். அவரிடம் சிவகாமி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டு, 'என்னை எதுக்காக இங்கேயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல, என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்' என்று கூறியிருந்தார்.

இந்த விஷயத்தை சென்னைக்கு வந்த பிறகு காமராஜரிடம் கூறினார் அந்த பிரமுகர். அதற்கு நிதானமாக பதில் சென்னார் 'அட போப்பா எனக்குத் தெரியாதா, அம்மாவைக் கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு. அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க. அவங்ககூட நாலு பேரு வருவான்.

அப்புறமா அம்மாவைப் பார்க்க, ஆத்தாவைப் பார்க்கன்னு பத்து பேரு வருவான். இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்கற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டுல இருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான். எதுக்கு வம்புன்னுதான் அவங்களை விருதுநகர்லேயே விட்டு வச்சிருக்கேன்' என்றார்.

அவரது நேர்மைக்கு இது ஒரு உச்சகட்ட எடுத்துக்காட்டு. இப்படி எத்தனையோ சம்பவங்கள்.

கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்த காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன் வந்தபோது நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

தன்னைப்பற்றி என்றுமே கவலைப்படாத காமராஜர் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும், வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் பற்றி மட்டுமே கவலைப்பட்டார்.

காமராஜரின் ஆட்சி காலத்தில் தான் தமிழ் நாட்டில் கல்வி, விவசாயம், தொழில், சாலைகள், மின்சாரம், நீர் பாசனம் என்று அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றது. அவர் அமைத்த அடித்தளமே தமிழகத்தின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது.

அவருக்குப் பின் எத்தனையோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள். என்றாலும் காமராஜர் என்ற பெயரைச் சொன்ன உடனே எழுந்து நின்று கும்பிடத் தோன்றுகிறது. யாரையும் பிரித்து பார்க்காத நேர்மையின் சிகரமாக திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் போன்ற இன்னொரு தலைவர் தேவை.... இனி காண முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நேர்மையை நேசிக்கும் அனைவருடைய நெஞ்சத்திலும் ஏக்கமாக எழுந்து நிற்கிறது
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார். 4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்..

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார்.

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது.

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.

81. பெருந்தலைவர் காமராஜரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று 15.7.1976-ல் இந்திய அரசு 25 காசு தபால் தலையை வெளியிட்டது.

82. தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசு தலைவர் என். சஞ்சீவி ரெட்டியால் 1977-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

83. டெல்லியில் காமராஜரின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம், அமைக்கப்பட்டுள்ளது.

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரது நினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடைய பணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்று கமென்ட் அடித்தார்!

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு, தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது.

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்ட விஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்க முற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.

96. அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்கு நேராகவே சொல்லி அனுப்பி விடுவார்.

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக் கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு.

100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச் சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால் 'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம் இருந்ததில்லை.

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில் நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை.

104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப் பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச் சிறப்பாக வழிநடத்த முடிந்தது.

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும். முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணி வரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலை ஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர்.

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தான குறிக் கோளாகவே இருந்தது.

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறை கூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடைய கருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத் திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக